நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Jun 2021 8:14 AM GMT (Updated: 15 Jun 2021 8:14 AM GMT)

நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

நாளை (ஜூன் 16ஆம் தேதி) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 17, 18 ஆகிய தேதிகள்: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 19ஆம் தேதி: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேல் பவானி (நீலகிரி) 11, அவலாஞ்சி (நீலகிரி) 8, சின்னக்கல்லார் (கோவை), தேவலா(நீலகிரி) 6, பந்தலூர் (நீலகிரி) 5, வால்பாறை (கோவை) 4, பெரியாறு (தேனி) 3, பொள்ளாச்சி கோவை) 2, தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), தேக்கடி (தேனி) தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் ஜூன் 18ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் ஜூன் 19ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story