கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை


கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
x
தினத்தந்தி 15 Jun 2021 11:30 AM GMT (Updated: 15 Jun 2021 11:30 AM GMT)

கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை

தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலை தற்போது 13 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி வருவதை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கொரோனா பரவலின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் விரைவில் கட்டுக்குள் வந்து விடும் 
என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது. ஆனாலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே அந்த மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த சூழ்நிலையில் நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். 17-ந் தேதியன்று டெல்லியில் பிரதமர மோடி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் அப்போதைய தொற்றின் நிலையை பிரதமரிடம் எடுத்துரைத்து, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி போன்ற சில திட்டங்களுக்கு விரைவாக அனுமதி பெற முதல்-அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

அதற்காக தற்போதைய தொற்றின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர்கள் 
ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டினார்.

 காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறிய முதல்வர், தொற்று எண்ணிக்கையை மேலும் குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கல்வி, வேலைவாய்ப்பில், சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட கலெக்டர்கள் அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்றும், தமிழக அரசு முன்வைத்துள்ள வளரும் வாய்ப்புகள்- வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம்- மகிழும் விவசாயிகள் உள்ளிட்ட 7 இலக்குகளை 10 ஆண்டுக்குள் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்  என்றும் கூட்டத்தில் முதல்- அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story