கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு


கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 4:26 AM GMT (Updated: 16 Jun 2021 4:26 AM GMT)

கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சென்னை, 

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (புதன்கிழமை) அதிகாலை கல்லணையை வந்தடைது. 

இந்நிலையில் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், 
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கல்லணை திறப்பு நிகழ்ச்சியின்போது கொள்ளிடம் ஆற்றின் உள்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பொத்தானை அழுத்தி அமைச்சர்கள் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.  அதனைத்தொடர்ந்து வெண்ணாற்றிலும், கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட பின்பு கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 

தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜூன் 16-ல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தண்ணீர் திறப்பையொட்டி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவோடு காட்சியளிக்கின்றன. 

Next Story