60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை


60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
x
தினத்தந்தி 17 Jun 2021 3:14 AM GMT (Updated: 17 Jun 2021 3:14 AM GMT)

மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி இன்று தமிழகம் வந்தடைந்தது.

சென்னை,

மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் தமிழகத்தின் நேரடி கொள்முதல் திட்ட்டத்தின் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. குறிப்பாக, கடந்த 10-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை 14 லட்சத்து 92 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் தமிழகத்திற்கு இன்று மேலும் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.

சென்னைக்கு வந்துள்ள இந்த தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக பயன்பாட்டின் அடிப்படையின் பிரித்து வழங்கும் பணிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி தேவை அதிகரிப்பதால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது. தொடர்ந்து கூடுதல் தடுப்பூசிகளை பெறும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்த உள்ளார்.

Next Story