கொரோனாவுக்கு தாய் பலியானதால் துபாயில் தவித்த 11 மாத குழந்தை விமானம் மூலம் அழைத்துவரப்பட்டது


கொரோனாவுக்கு தாய் பலியானதால் துபாயில் தவித்த 11 மாத குழந்தை விமானம் மூலம் அழைத்துவரப்பட்டது
x
தினத்தந்தி 18 Jun 2021 12:54 AM GMT (Updated: 18 Jun 2021 12:54 AM GMT)

கொரோனாவுக்கு தாய் பலியானதால் துபாயில் தவித்த 11 மாத குழந்தை விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி, 

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வேலவன்(வயது 38) இவரது மனைவி பாரதி (38). இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்டான். 2-வது மகனுக்கு 7 வயது ஆகிறது. 3-வது மகன் தேவேஷ் பிறந்து 11 மாதங்கள் ஆகிறது. பாரதி குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து வேலைக்காக தேவேசை 9 மாத கைக்குழந்தையாக தூக்கிக்கொண்டு துபாய்க்கு சென்றார்.

அங்கு வீட்டு வேலை செய்து வந்த பாரதி, கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உடல் துபாயில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவருடைய கைக்குழந்தை தேவேஷ் தாயின்றி தவித்தது. பாரதியின் தோழிகள் குழந்தையை பராமரித்து வந்தனர். இதுபற்றி அறிந்த துபாயில் வசிக்கும் துபாய் தி.மு.க. அமைப்பாளர் எஸ்.எஸ்.முகமது மீரான், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை தெரிவித்தார். இதைத்தொடா்ந்து அந்த குழந்தையை தமிழகத்துக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டார். பின்னர், நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த திருவாரூரை சேர்ந்த சதீஷ்குமாருடன் குழந்தை தேவேஷ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த விமானம் நேற்றறு திருச்சி வந்தடைந்ததும், விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தையின் தந்தை வேலனிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Next Story