திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், தேனியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jun 2021 10:04 PM GMT (Updated: 19 Jun 2021 10:04 PM GMT)

நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், தேனியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனி, சென்னை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், நாளை (திங்கட்கிழமை) முதல் 23-ந் தேதி (புதன்கிழமை) வரை 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம், ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 3 செ.மீ., சின்கோனா, சின்னக்கல்லாறு, சோலையாறு, வால்பாறை, அவலாஞ்சி, தேவலா, மேல் பவானியில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.


Next Story