சிமெண்டு விலை உயர்வுக்கு காரணம் என்ன? தென் இந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்


சிமெண்டு விலை உயர்வுக்கு காரணம் என்ன? தென் இந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2021 2:13 AM GMT (Updated: 20 Jun 2021 2:13 AM GMT)

சிமெண்டு விலை உயர்வு குறித்து தென் இந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

விலை உயர்வு ஏன்?

தென் இந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கம் (சிக்மா) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா பரவலின் 2-வது அலை காலகட்டத்தில் மற்ற அனைத்து தொழில்களையும்போல சிமெண்டு உற்பத்தி தொழிலிலும் கடினமான சூழ்நிலை நிலவுகிறது. சுமார் 30 முதல் 40 சதவீத திறன் பயன்பாடு மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. அதேநேரத்தில் இதற்கு முந்தைய ஊரடங்கு காலத்திலும், தற்போதைய காலகட்டத்திலும் எங்களுடைய ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலன்களை பாதுகாத்ததோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தோம். நாங்களும் பிழைக்கவேண்டும், அதேநேரத்தில் மற்ற எல்லா இடுபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதன் காரணமாக சிமெண்டு விலை உயர்வு என்பது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. மொத்த 
கட்டுமான செலவோடு ஒப்பிடுகையில், அதில் சிமெண்டு விலை என்பது சிறிய அளவிலானதுதான் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

உறுதி
தொழில்துறை அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பெருந்தொற்று சூழ்ந்துள்ள இந்த கடினமான நேரத்தில், பொதுமக்களுக்கு தகுந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் சிமெண்டு கிடைக்கச்செய்வோம் என்று 
உறுதியளிக்கிறோம். சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிக சலுகை விலையில் சிமெண்டு கிடைக்கச் செய்வதற்காக சிமெண்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுகின்றன. வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சிமெண்டு தொழிற்சாலைகள் முழுமையாக ஆதரவு அளிக்கும் என்று தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதி அளிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென் இந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி சிமெண்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story