தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் மறுப்பு


தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு:  முன்னாள் அமைச்சர் மறுப்பு
x
தினத்தந்தி 20 Jun 2021 4:16 AM GMT (Updated: 20 Jun 2021 4:16 AM GMT)

தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார்.



சென்னை,

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது, கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தற்போது மின் தடை ஏற்படுகிறது என கூறினார்.

தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.  அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது.  கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல.  நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம்.  கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்று அழைத்தார்கள்.  விவசாயிகளுக்கு மின்சாரம் தரவில்லை. தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல. சட்டமன்றத்தில் அனைத்துக்கும் பதில் தரப்படும் என கூறினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார்.  பராமரிப்பு இல்லாதிருந்தால் கடந்த மே 2ந்தேதி வரை எப்படி மின்சாரம் வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story