மின்வாரிய குறைகளை தெரிவிக்க மின்னகம் என்ற பெயரில் புதிய நுகர்வோர் சேவை மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


மின்வாரிய குறைகளை தெரிவிக்க மின்னகம் என்ற பெயரில் புதிய நுகர்வோர் சேவை மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 Jun 2021 11:14 PM GMT (Updated: 20 Jun 2021 11:14 PM GMT)

பொதுமக்கள் மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவிக்க சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற புதிய மின்சார நுகர்வோர் சேவை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மின்னகம் என்ற புதிய மின்சார நுகர்வோர் சேவை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மையத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து இந்த மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக பிரத்யேகமான 94987-94987 என்ற செல்போன் எண்ணையும் முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தயாநிதிமாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., மின்சார வாரியத்தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

24 மணி நேரம் செயல்பாடு

இதுகுறித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:-

புதிய மின்சார நுகர்வோர் சேவை மையம் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு ஷிப்டுக்கு 65 நபர்கள் வீதம் 3 ஷிப்டுகளுக்கு 195 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்பணியாளர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களைக் கணினி மூலம் பதிவு செய்கின்றனர். இவை, சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறி யாளர், உதவி பொறியாளர் அலுவ லகங்களுக்கு சிசி-எம்ஏசி. என்ற மென்பொருள் தொழில்நுட்பம் வாயிலாக தானியங்கி மூலம் உடனடியாக சென்றடைகிறது.

அதன் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பெறப்படும் புகார்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 44 மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தலா 3 நபர்கள் வீதம் 132 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

புகார்கள் தெரிவிக்க வசதி

புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கு புகாரின் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அப்புகார்கள் சரி செய்யப்பட்ட உடன், அது குறித்த தகவலும், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மின்சார வாரியம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சமுக வலைதளங்களான முகநூல், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு சமூக ஊடக மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 3 கோடியே 10 லட்சம் மின்சார இணைப்புதாரர்கள் உள்ளனர். புதிய மின்சார இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்சார அழுத்த ஏற்ற, இறக்கம், உடைந்த மின்சார கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்சார கம்பிகள், பழுதடைந்த மின்சார பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்சார மாற்றிகள், மின்சார தடை குறித்த தகவல், குறைந்த மற்றும் உயர் மின்சார அழுத்தம் போன்ற மின்சார துறை சார்ந்த தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். அத்துடன் சந்தேகங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story