சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது


சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 21 Jun 2021 12:56 AM GMT (Updated: 21 Jun 2021 12:56 AM GMT)

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே அரசு பஸ் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

சென்னை, 

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப்பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஊரடங்கு 21-ந் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த ஊரடங்கை 28-ந் தேதி காலை 6 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது. 

மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும், வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

வகை 3-ல் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

இ-பதிவு தேவையில்லை

* உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (பேக்கரி) பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* இதர மின் வணிக சேவை நிறுவனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* குழந்தைகள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.

பஸ் போக்குவரத்து தொடக்கம்

* மாவட்டத்துக்குள் பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

இ-பதிவு கிடையாது

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்சிகளில், ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்வுக்கு இ-பாஸ் பெற்று செல்லலாம்

திருமண நிகழ்வுகளுக்கு, வகை-2-ல் உள்ள அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் மற்றும் வகை 3-ல் குறிப்பிட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் கலெக்டரிடம் இருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

சுற்றுலா தலங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் இயக்க அனுமதி

சென்னையில் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரெயில் போக்குவரத்து 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

படப்பிடிப்புகளுக்கு அனுமதி

* திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள், கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ளவேண்டும்.

* படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.

* திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

Next Story