வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், சேவை உரிமை சட்டம்: கவர்னர் உரைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு


வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட், சேவை உரிமை சட்டம்: கவர்னர் உரைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
x
தினத்தந்தி 21 Jun 2021 9:14 PM GMT (Updated: 21 Jun 2021 9:14 PM GMT)

தமிழகத்தில் வேளாண்மைத்துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும் என்று கவர்னர் உரையில் இடம் பெற்ற அறிவிப்புகளுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13 ஆண்டுகளாக பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கப்படும். தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பவை உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

ஏமாற்றம்

தமிழகத்தின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்திருப்பது ‘நீட்’ தேர்வு ஆகும். இந்த தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டங்களை நிறைவேற்றி அவற்றுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் அறிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு இதுதான் இயல்பான நடைமுறை என்றாலும் கூட, கடந்த ஆட்சியில் இதே போன்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இத்தகைய சூழலில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைப்பதை உறுதி செய்ய எத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடிக்கப்போகிறது என்பது குறித்த செயல்திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story