தமிழகத்தில் 7,427 பேருக்கு தொற்று: 28 மாவட்டங்களில் 200-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் 7,427 பேருக்கு தொற்று: 28 மாவட்டங்களில் 200-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 10:11 PM GMT (Updated: 21 Jun 2021 10:11 PM GMT)

தமிழகத்தில் நேற்று 7,427 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 28 மாவட்டங்களில் 200-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4,267 ஆண்கள், 3,160 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 427 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 276 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,187 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 891 பேரும், ஈரோட்டில் 795 பேரும், சேலத்தில் 511 பேரும், சென்னையில் 439 பேரும், திருப்பூரில் 458 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 28 மாட்டங்களில் 200-க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

3 கோடி பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 5 லட்சத்து 23 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 21 ஆயிரத்து 293 ஆண்களும், 10 லட்சத்து 8 ஆயிரத்து 593 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 29 ஆயிரத்து 924 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 87 ஆயிரத்து 948 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரத்து 10 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

189 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 107 பேரும், தனியார் மருத்துவமனையில் 82 பேரும் என 189 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 25 பேரும், கோவையில் 23 பேரும், வேலூரில் 16 பேரும், திருச்சியில் 12 பேரும், சேலம், ஈரோடு, செங்கல்பட்டில் தலா 9 பேரும், தஞ்சாவூரில் 8 பேரும் உள்பட நேற்று மட்டும் 32 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 38 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 31 ஆயிரத்து 386 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

67 ஆயிரம் படுக்கைகள் காலி

தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 14 ஆயிரத்து 120 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 6 ஆயிரத்து 449 பேரும், ஐ.சி.யு. படுக்கைகளில் 5 ஆயிரத்து 805 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று 35 ஆயிரத்து 995 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 735 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 4 ஆயிரத்து 567 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 67 ஆயிரத்து 297 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 10 ஆயிரத்து 597 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தவகையில் 58 ஆயிரத்து 671 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

15,281 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 15,281 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 2,104 பேரும், ஈரோட்டில் 2,042 பேரும், திருப்பூரில் 1,575 பேரும், சேலத்தில் 858 பேரும் அடங்குவர். இதுவரையில் 23 லட்சத்து 37 ஆயிரத்து 209 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 69 ஆயிரத்து 372 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story