கொரோனா 3-வது அலைக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும்


கொரோனா 3-வது அலைக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:40 PM GMT (Updated: 22 Jun 2021 11:40 PM GMT)

கொரோனா 3-வது அலைக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அதை எதிர்கொள்ள ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா 2-வது அலை பரவல் தீவிரமடைந்தபோது, ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி வினியோகம் குறித்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, மாநிலத்தில் 1.20 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளன. தடுப்பூசி போடும் பணி முன்னேற்றம் அடைந்துள்ளது என தெரிவித்தார்.

தொடர வேண்டும்

இதையடுத்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்துவைத்த நீதிபதிகள், கொரோனா 3-வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. இருந்தாலும், எதிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும்போது அதை எதிர்கொள்வதற்காக, 2-வது அலையைச் சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அகற்றாமல் அப்படியே வைத்து பராமரிக்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தியையும் தொடர வேண்டும். தடுப்பூசி மருந்து வினியோகத்தை துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

Next Story