அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்


அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:52 PM GMT (Updated: 22 Jun 2021 11:52 PM GMT)

அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 3 வேளாண் மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் தமிழரசி (மானாமதுரை) பேசினார். அவர் பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

உறுப்பினர் இங்கே 3 வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றை திரும்பப்பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தி.மு.க. பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

குடியுரிமை திருத்த சட்டம்

ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத்தொடர் என்ற முறையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று கருதுகிற காரணத்தினால்தான், வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அந்த உரிய தீர்மானத்தை கொண்டுவந்து, நிச்சயமாக மத்திய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதைப்போலவே, மத்திய அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமை திருத்த சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story