கொரோனா நோயாளிகளுக்காக 79 ஆயிரத்து 618 புதிய படுக்கைகள் 3-வது அலையை எதிர்கொள்ள தயார் சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


கொரோனா நோயாளிகளுக்காக 79 ஆயிரத்து 618 புதிய படுக்கைகள் 3-வது அலையை எதிர்கொள்ள தயார் சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:57 PM GMT (Updated: 22 Jun 2021 11:57 PM GMT)

கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அ.தி.மு.க. உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

சென்னை,

கொரோனா தொற்று குணமாகிய பின்பு ஏற்படும் நோய்களான கருப்பு பூஞ்சை பாதிப்பு, தாடையில் இருந்து பற்கள் கொட்டும் நிலை உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவுக்கு பிந்திய மறுவாழ்வு மையங்களை தொடங்க வேண்டும்.

3-வது அலை வருமா, வராதா என்ற நிலை உள்ளது. வரக்கூடாது, அப்படி வந்தால் அதை எதிர்கொள்வதற்கு இப்போது இருக்ககூடிய கட்டமைப்புகளை விட வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் தமிழகத்தில் 2 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை., குறைந்த பட்சம் 1 லட்சம் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அருகே தாயாரும் அருகில் இருந்து கவனிக்கும் வகையில் படுக்கை இருக்க வேண்டும். எனவே 3-வது அலை வருவதற்குள் அந்த தாய் 2 டோஸ் தடுப்பு ஊசி போட வேண்டும். எனவே தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

நீட் எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க. எப்போதுமே உறுதியாக உள்ளது. அதேநேரம் தி.மு.க. தேர்தலை சந்தித்த போது, நாங்கள் அட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்ன காரணத்தினால் இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் ஆய்வு

முதல்-அமைச்சர் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கையால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. பிரதமரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மட்டுமின்றி பொருளாதார ரீதியாக தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினைகளையும் முதல்-அமைச்சர் எடுத்து கூறியுள்ளார். தொற்று அதிகம் உள்ள திருப்பூர், ஈரோட்டில் ஆய்வு மேற்கொண்டார். டாக்டர்களிடம் கலந்து ஆலோசனை செய்தார்

கோவைக்கு வந்தபோது, அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வதாக கூறினார். எங்களுக்கெல்லம் பெரிய அதிர்ச்சி. ஒரு முதல்-அமைச்சர் இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் தொற்று பாதித்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேரில் சென்று கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். எந்த தலைவரும் இதுவரை இப்படி சென்றது இல்லை. அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகளை உற்சாகப்படுத்தவே நான் சென்றேன் என்று கூறினார்.

அவர் அளித்த உற்சாகத்தால் கொரோனா தொற்று மிக வேகமாக குறைந்து வருகிறது. மாநில அரசுகளுக்கு நாங்களே கொள்முதல் செய்து அனுப்புவோம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பு வருவதற்கும் காரணம் நம்முடைய முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கொடுத்த நெருக்கடிதான். தமிழகத்தில் தடுப்பூசி அதிகளவில் வருவதற்கு முதல்-அமைச்சர்தான் காரணம்.

விழிப்புணர்வு

தமிழகத்திற்கு மத்திய அரசின் ஒதுக்கீடு ஜூன் மாதம் 42 லட்சமாக இருந்தது. ஜூலை மாதம் 71 லட்சம் தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு கோடியே 24 லட்சத்து 61 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வேண்டும். கிராமங்கள் தோறும் தடுப்பூசி போட விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு 2 லட்சம் தடுப்பூசி வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்ற மாநிலங்களில் எல்லாம் தடுப்பூசி போடுவதற்கு கோதுமை, அரிசி, சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் நம்முடைய முதல்-அமைச்சர் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்வு காரணமாக மக்கள் காத்திருந்து தடுப்பூசி போடும் நிலை உள்ளது. விரைவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாநிலமாக தமிழகம் மாறும். இதை மக்கள் இயக்கமாக மாற்றியது நம்முடைய முதல்-அமைச்சர் தான்.

3-வது அலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னால் வருகின்ற கருப்பு பூஞ்சை தமிழகத்தில் 2,510 பேருக்கு நோய் தாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இதற்காக சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வரப்பெற்றுள்ளது. 130 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். எனவே யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனாவுக்கு பிறகு வரும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் தனியாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3-வது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நம்முடைய முதல்-அமைச்சர் களத்தில் இறங்கி தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகள் வார்டில் சிறப்பு கவனம் செலுத்தி அவர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஒன்றரை மாதத்தில் 79 ஆயிரத்து 618 புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா ஆஸ்பத்திரிகளிலும் புதிய படுக்கைள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் செறியூட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம். கொரோனா 3-வது அலை வரக்கூடாது என்று நினைக்கிறோம், வராது, வரக்கூடாது, அப்படியே வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story