நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி உறுதி
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அரசின் முயற்சிக்கு கண்டிப்பாக துணை நிற்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
சென்னை
தமிழக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதே திமுக, அ.தி.மு.க.வின் உணர்வு; தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க.-குரல் கொடுக்க தயாரா? - என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சட்டத்திற்கு உட்பட்டு விதிவிலக்கு தரப்பட்டால், பா.ஜ.க ஆதரவு தயார் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
சென்னையை போல கோவைக்கு மெட்ரோ கொண்டுவரப்படாதது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும் போது
கோவையை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தவறான கருத்தை பதிவு செய்யவேண்டாம்.
மக்கள் எங்களை ஏன் புறக்கணிக்கிறார்கள் என புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறோம். மக்கள் எங்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவுக்கு தமிழநாடு அரசின் செயல்பாடு இருக்கும் என கூறினார்.
விராலிமலை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசும் போது கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒரு லட்சம் படுக்கைகளை உருவாக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறிய தி.மு.க., தற்போது மாணவர்களுக்கு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை சட்டசபையில் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது :-
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு தமிழக அரசுக்கு அ.தி.மு.க துணை நிற்கும். அ.தி.மு.க ஆட்சியில் இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வர முடியவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என கூறினார்.
மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 4,5முறை வலியுறுத்தினேன் என கூறினார்.
Related Tags :
Next Story