அரசு பஸ்களில் இலவச பயணம் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் அறிவிப்பு


அரசு பஸ்களில் இலவச பயணம் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 9:16 PM GMT (Updated: 23 Jun 2021 9:16 PM GMT)

அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய நேற்று முதல் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

கொரோனா நோய் தடுப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த 21-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் பெண்கள் பலர் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று முதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதித்து முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அதனடிப்படையில் மாநகர பஸ்களில் நேற்று பயணம் செய்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் இலவச பயணம் செய்தனர். இதில் எத்தனை பேர் பயணம் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணம் இல்லாமல் இலவச பயணத்திற்கு டிக்கெட் வழங்கி வருகிறது. இவர்கள் ஆர்வமாக நேற்று மாநகர பஸ்களில் பயணம் செய்தனர்.

வாழ்க்கைத்தரம் உயர்வு

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பை சேர்ந்த குமாரி கூறும்போது, மாற்றுத்திறனாளிகள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய நீண்டநாள் கோரிக்கை இது. இலவச பஸ் பயணம் என்பது எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்வதற்கு பேருதவியாக இருக்கும். அத்துடன் மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் போதிய வசதியை மேம்படுத்தி தரவேண்டும் என்றார்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

இதுகுறித்து தோழிதிருநங்கைகள் அமைப்பின் ஆலோசகர் பி.சுதா கூறியதாவது:-

தமிழக அரசு திருநங்கைகளுக்கு கட்டணமில்லாமல் மாநகர பஸ்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கியிருப்பது எங்களுக்கு அளவில்லா சந்தோஷத்தை அளிக்கிறது. திருநங்கைகள் நலனுக்காக பல்வேறு பயிற்சிகள், உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்வதற்காக மாநகரில் பல்வேறு இடங்களுக்கு பஸ்களில் பயணம் செய்வது வழக்கம். எங்களுக்கு போதுமான வருமானம் இல்லாதபோது கூடுதலாக பஸ் கட்டணம் செலுத்துவது என்பது கடினமாக இருந்துவந்தது.

இதுகுறித்து பல ஆண்டுகளாக அரசிடம் இலவச பயண அட்டை வழங்க கோரிக்கை விடுத்துவந்தோம். ஆனால் எந்த அரசும் இதுவரை எங்களுக்கு இலவச பயண அட்டை வழங்கவில்லை. ஆனால் தற்போது பதவி ஏற்று இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அரசு பஸ்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கியிருப்பதை நாங்கள் நன்றியுடன் பெறுவதுடன் பயனுள்ள வகையில் பஸ் பயணத்தை பயன்படுத்துவோம். குறிப்பாக திருநங்கைகள் மேம்பாட்டுக்கு நாங்கள் செய்து வரும் பணியை மென்மேலும் தீவிரப்படுத்துவோம். பணம் எங்களது பயணத்திற்கு தடையல்ல என்பதை எங்களுக்கு ஊக்கத்தை தருகிறது. இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமானது என்பதை நன்கு நிரூபித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story