கொரோனா பாதிப்பு நிவாரண 2-ம் தவணைத் தொகையுடன் 14 மளிகை பொருள் தொகுப்பை நாளைக்குள் வினியோகிக்க வேண்டும்


கொரோனா பாதிப்பு நிவாரண 2-ம் தவணைத் தொகையுடன் 14 மளிகை பொருள் தொகுப்பை நாளைக்குள் வினியோகிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Jun 2021 10:24 PM GMT (Updated: 23 Jun 2021 10:24 PM GMT)

கொரோனா பாதிப்பு நிவாரண 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருள் தொகுப்பை நாளைக்குள் வினியோகிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலினால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். எனவே அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதில் முதல் தவணை தொகையாக ரூ.2 ஆயிரமும், 2-ம் தவணைத் தொகையாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி முதல் தவணை தொகை வழங்கும் திட்டத்தை மே 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மே 15-ந்தேதியில் இருந்து முதல் தவணை தொகை, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

2-ம் தவணை தொகை

அதுபோல 2-ம் தவணை தொகையை வழங்கும் திட்டத்தை ஜூன் 3-ந்தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 2-ம் தவணை தொகையான ரூ.2 ஆயிரம், 15-ந்தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு உத்தரவிட்டு இருந்தது.

கடிதம்

இந்த நிலையில் 2-ம் தவணை தொகையை 25-ந்தேதிக்குள் (நாளை) வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாளைக்குள்....

கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 15-ந்தேதி முதல் வினியோகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது 25-ந்தேதிக்குள் (நாளை) இவை வினியோகம் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 11-ந்தேதி நடத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story