கேரளா, மராட்டியத்தை தொடர்ந்து தமிழகத்திலும் ஒரு பெண்ணுக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று


கேரளா, மராட்டியத்தை தொடர்ந்து தமிழகத்திலும் ஒரு பெண்ணுக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Jun 2021 11:10 PM GMT (Updated: 23 Jun 2021 11:10 PM GMT)

கேரளா, மராட்டியம், மத்தியபிரதேசத்தை தொடர்ந்து தமிழகத்தில் பெண் ஒருவருக்கு உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

லட்சக்கணக்கான மக்களிடம் பல்கி பெருகும்போது வைரஸ் கிருமி தன்னை காத்துக்கொள்ள உருமாற்றம் அடைய தொடங்கும். அவ்வாறு உருமாற்றமடைந்த வைரஸ்கள் ஏற்கனவே உள்ள வைரசை காட்டிலும், வீரியமிக்கதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அந்த வகையில் கொரோனா முதல் அலையில் இந்தியா முழுவதும் ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் காணப்பட்டது. நாளடைவில் அது உருமாற்றம் அடைந்து வீரியமானது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த அந்த வைரசை ‘டெல்டா’ வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அதிலிருந்தும் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2-வது அலை ஏற்பட்டபோது தமிழகம், மராட்டியம், உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்தது. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்தன. இதையடுத்து வைரசின் மரபணுவை ஆய்வு செய்து தமிழகத்தில் எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய தமிழக பொது சுகாதாரத்துறை திட்டமிட்டது.

பெண் ஒருவர் பாதிப்பு

ஆய்வுக்காக, குடும்பமாக கொரோனாவால் பாதிப்பட்டோர், ஒரே பகுதி அல்லது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளானோர், இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய்களின்றி கொரோனாவால் உயிரிழந்தோர், தடுப்பூசி செலுத்தியும் பாதிப்புக்கு உள்ளானோரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 1,159 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் இதுவரை 772 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகி, அதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. குறைந்த மாதிரிகளில் மட்டுமே ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் காணப்பட்டது.

இந்நிலையில் முடிவுகள் வெளியான 772 மாதிரிகளில் அதிர்ச்சி தரும் தகவலாக பெண் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவரது சளி மாதிரி அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திலிருந்து பெறப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

பீதியடைய தேவையில்லை

வைரஸ்கள் தம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உருமாறி கொண்டேதான் இருக்கும். அந்த வகையில்தான் தற்போது ‘டெல்டா’ மற்றும் ‘டெல்டா பிளஸ்’ வகை பாதிப்பு தமிழகத்தில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் யாரும் பீதியடைய தேவையில்லை. தடுப்பூசிகளை சரியாக செலுத்திக்கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று வரவில்லை. அவ்வாறு தொற்றுக்குள்ளான வெகு சிலருக்கும் கூட பாதிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. ‘டெல்டா பிளஸ்’ பாதிப்புக்குள்ளான பெண் தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் முறையாக 2 தவணையும் செலுத்தினாரா என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கு அவர் பயணித்தாரா, அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டதா என்பன குறித்த தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் வந்தபிறகே இந்த விவகாரத்தில் உரிய முடிவுக்கு வர இயலும்.

தற்போது உள்ள சூழலில் டெல்டா வகையாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் புதிய வகையாக இருந்தாலும் சரி சிகிச்சை முறைகளும், மருந்துகளும் ஒன்றுதான். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதிப்பில் இருந்து 90 சதவீதம் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ கண்காணிப்பு தீவிரம்

இந்தியாவில் மராட்டியம், கேரளா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை ‘டெல்டா பிளஸ்’ புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் அது ஊடுருவியிருப்பதால் மாநிலம் முழுவதும் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story