கொரோனா 3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ளும் சக்தி தி.மு.க. அரசுக்கு இருக்கிறது மு.க.ஸ்டாலின் நம்பிக்கை


கொரோனா 3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ளும் சக்தி தி.மு.க. அரசுக்கு இருக்கிறது மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2021 9:52 PM GMT (Updated: 24 Jun 2021 9:52 PM GMT)

கொரோனா 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி தி.மு.க. அரசுக்கு இருக்கிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவின் பால் விலை குறைப்பு

கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டவுடன், தலைமைச்செயலகத்திற்கு சென்று நான் பொறுப்பேற்றேன். பொறுப்பேற்றவுடனே, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டேன். முதல் தவணையான ரூ.2 ஆயிரம் மே மாத்திலேயே வழங்கப்பட்டது. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று மேலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.8,393 கோடி செலவில் 2 கோடியே 11 லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்திருக்கின்றன.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளோம். அது 16-5-2021 முதலே செயல்பாட்டுக்கு வந்தது. அனைத்து மகளிரும் நகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டோம். திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது. என்னிடம் தரப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்த்து வைக்க ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தைத் தொடங்கினேன். இன்றைக்கு காலையிலே வரை, ஆதாரத்தோடு புள்ளிவிவரங்களோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், 75 ஆயிரத்து 546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை பாதிப்பு

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கான கட்டணத்தை முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் அரசே செலுத்த உத்தரவிட்டோம். இதனால் 20 ஆயிரத்து 520 பேர் பயனடைந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்கப்பட்டது. தடுப்பூசிதான் உயிர்க்கவசம் என்பதால், தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாகவே மாற்றப்பட்டது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து 47 நாட்களில் 65 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையைவிட இது இருமடங்கு அதிகமாகும்.

போர்க்கால நடவடிக்கை

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது கொரோனா உச்சத்தில் இருந்தது. மே 7-ந்தேதி, தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை நாளொன்றுக்கு 26 ஆயிரமாக இருந்தது. அது 36 ஆயிரமாக உயர்ந்து கொண்டு இருந்தது. மருத்துவ வல்லுனர்களை விசாரித்தபோது, ‘இது 50 ஆயிரம் ஆகும் - ஏன், அதைவிட தாண்டிக்கூட போகும்’ என்றெல்லாம் சொன்னார்கள்.

தொடக்கத்தில் கடும் சவாலாகத் தெரிந்தது. ஆனால் அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, அப்படியே படிப்படியாகக் குறைந்து 7 ஆயிரத்துக்கும் கீழ் வந்துவிட்டது. இன்னும் படிப்படியாக குறைந்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி இல்லை என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். “இல்லை, இல்லை” என்ற சொல்லை இல்லாமல் ஆக்கியிருக்கிறோம் இந்த ஆட்சியிலே.

3-வது அலையை தாங்கும் சக்தி

கொரோனா 3-வது அலை வரக்கூடாது. வந்தாலும், அதனைத் தாங்கி எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகத்தான் தொற்று குறைந்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் ஆட்சியிலே அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும், தி.மு.க. ஆட்சியில் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லி இருக்கிறார். பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை வைத்து இப்படி சொல்கிறார். மே 6-ந்தேதி வரைக்கும் முதல்-அமைச்சராக இருந்தது அவர்தான்.

அரசு செய்திக்குறிப்பு

26-2-2021-க்கு பிறகு அன்றைய முதல்-அமைச்சர் எந்த அரசு பணிகளையும் பார்க்கவில்லையா என்பதுதான் என்னுடைய கேள்வி. 12-4-2021 அன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கோட்டையில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகளோடு அன்றைய முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த பாதிப்பு 6,618. 17-4-2021 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை அனைத்தும் அன்றைய முதல்-அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டதாக அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.

அன்றைய தினம் கொ ரோனா பாதிப்பு 8,449. 18-4-2021 அன்று உயர் அதிகாரிகளை அழைத்து அன்றைய முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதற்கு மறுநாள் தமிழ்நாட்டில் பாதிப்பு 10,941. 26-4-2021 அன்று அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு அன்றைய முதல்-அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார். அன்றையதினம் தமிழ்நாட்டில் பாதிப்பு 15,659 ஆகிவிட்டது. 28-4-2021 தடுப்பூசி கொள்முதல் குறித்து அன்றைய முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு சொல்கிறது. அன்றைய பாதிப்பு 16,665. இதுதான் உண்மையான நிலைமை.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’

அதாவது, ஏப்ரல் மாதத்தில் முழுமையாக அன்றைய முதல்-அமைச்சர் மேற்பார்வையில்தான் பணிகள் நடந்துள்ளன. ஆனால் கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அன்றையதினம் ஏற்பட்ட பாதிப்பு 19,588. இவை அனைத்துக்கும் முந்தைய அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மார்ச் 6-ந்தேதியில் இருந்தே தமிழ்நாட்டில் கொரோனா ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. மார்ச் 30-ந்தேதியே தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது என்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு கல்வித் துறைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஏப்ரல் 6 முதல் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது. பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரம் ஆக ஆனது. எனவே, கொரோனாவை அ.தி.மு.க. அரசு கட்டுப்படுத்திவிட்டது என்ற வாதம் மிகமிகத் தவறானது. அவரை யாராவது கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று கையை கட்டிப்போட்டு வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்று ஒரு திரைப்படம் வந்தது. அதைப்போல பிப்ரவரி 26 முதல் மே 6 வரையிலான 2 மாத ஆட்சியை அ.தி.மு.க. மறந்துவிட்டதா? என்று நான் கேட்க விரும்புகிறேன். ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்ததும் அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரம் எனக் கூடியது. இத்தகைய மோசமான சூழலைக் கட்டுப்படுத்தியதுதான் தி.மு.க. அரசின் மகத்தான சாதனை.

ஆலோசனை

தி.மு.க. ஆட்சி அமைந்ததும், அனைத்து சட்டமன்றக் கட்சிக் குழுவை உள்ளடக்கி ஒரு குழுவை நியமித்தோம். அ.தி.மு.க. சார்பிலேகூட முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அதில் இடம் பெற்றிருக்கிறார். இந்தக் குழுவின் ஆலோசனைகளைப் பெற்றுதான் இன்றைய அரசு செயல்படுகிறது.

அனைவரும் சேர்ந்து செயல்பட்டு, அனைத்து தரப்பினரது ஆலோசனையையும் பெற்று கொரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும்.

தி.மு.க. அரசின் சாதனை

தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளைத் தொடர்ந்து சொல்ல வேண்டுமானால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சித்தலைவர்கள் மீதான வழக்குகள், அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், அதாவது 17 பேருக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ற வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் தாக்கப்பட்டு, காயமடைந்த 94 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையத்தையும், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தையும் செயல்பட வைக்க பிரதமரை வலியுறுத்தியிருக்கிறோம்.

நிவாரண உதவி

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சம், கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என இப்படி பல்வேறு சலுகைகளை அறிவித்துச் செயல்படுத்தியிருக்கிறோம்.

கொரோனா தடுப்பு பணியில் இறந்த மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் தலைவர் கருணாநிதி பெயரில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, அவர்கள் வாழ கனவு இல்லம் அறிவிக்கப்பட்டது. தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவை போற்ற கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story