ஆண்களுக்கு கட்டுப்பாடுகள்: மின்சார ரெயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ஆண்களுக்கு கட்டுப்பாடுகள்: மின்சார ரெயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 11:20 PM GMT (Updated: 24 Jun 2021 11:20 PM GMT)

மின்சார ரெயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 2-வது அலை தீவிரமடைய தொடங்கிய நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் வருகை குறைவால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல், ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 640-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன.

குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்களிலும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் சூழ்நிலையில், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

பொதுமக்கள் பயணிக்கலாம்

அதேபோல் மின்சார ரெயில்களின் எண்ணிக்கையையும் கடந்த 2 வாரங்களாக படிப்படியாக தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இதுவரை 470 எண்ணிக்கையில் மின்சார ரெயில் சேவைகள் சென்னையில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த சேவை 630 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மின்சார ரெயிலில் பொதுமக்களும் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஊரடங்கு தளர்வு தொடர்பாக கடந்த 20-ந்தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, மின்சார ரெயிலில் கீழ்க்கண்ட பயணிகள் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

1. மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன ஊழியர்கள், ஐகோர்ட்டு மற்றும் மற்ற கோர்ட்டு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மற்ற துறைகளை சேர்ந்த ஊழியர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதம் அல்லது அடையாள அட்டையுடன் பயணிக்கலாம். மேலும் இவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம். இவர்களுக்கு ‘சிங்கிள் டிக்கெட்’, ‘ரிட்டன் டிக்கெட்’, சீசன் டிக்கெட்டுகள்’ வழங்கப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி

2 அதேபோல், வெளியூர்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ரெயில் நிலையங்கள் வந்து, அங்கிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், மின்சார ரெயிலில் பயணிக்கலாம். அவர்கள் தாங்கள் வைத்திருக்கும் முன்பதிவு ரெயில் டிக்கெட்டை காண்பித்து, கவுண்ட்டர்களில் ‘சிங்கிள் டிக்கெட்’ களை வாங்கி கொள்ளலாம். இவர்களும் மின்சார ரெயிலில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம்.

3. அதேபோல் பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் மின்சார ரெயிலில் பயணிக்கலாம். அவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. மேலும் இவர்களுக்கு சிங்கிள் டிக்கெட்’, ‘ரிட்டன் டிக்கெட்’, சீசன் டிக்கெட்டுகள்’ வழங்கப்படும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெண் பயணிகள் தங்களோடு அழைத்து செல்லலாம்.

ஆண்களுக்கு கட்டுப்பாடு

4. ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத சாதாரண நேரத்தில், அதாவது காலை 7 மணிக்கு முன்பு வரையிலும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், இரவு 7 மணிக்கு பிறகும் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஆண்களுக்கு ‘சிங்கிள்’ டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். ‘ரிட்டன்’ டிக்கெட் வழங்கப்படாது. மேலும், மேலே குறிப்பிட்டுள்ள 1 மற்றும் 2-வது வகையில் உள்ள ஆண் பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.

மேலும், மின்சார ரெயிலில் பயணிக்கும் பயணிகள் முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story