கொரோனாவால் கணவனை இழந்த பெண் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை


கொரோனாவால் கணவனை இழந்த பெண் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2021 12:28 PM GMT (Updated: 25 Jun 2021 12:28 PM GMT)

ஈரோட்டில் கொரோனாவால் கணவனை இழந்த பெண் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு,

ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (67) ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும், நித்யா, ரம்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

மூத்த மகள் நித்யாவிற்கு சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாஸ்கர் சென்னையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ்கிருஷ்ணன் (6) என்ற மகனும் உள்ளனர்.

இதற்கிடையில், பாஸ்கருக்கு கடந்த மாதம் 2-ந் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்த நித்யா சரிவர சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். கணவர் இறந்ததால் நித்யா தனது மகன், மகளுடன் திண்டலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவர் பிரிவைத் தாங்க முடியாத நித்யா தற்கொலை செய்ய வேண்டும் என்ற தவறன முடிவை எடுத்துள்ளார். 

அதன்படி நேற்று மதியம் உணவில் வி‌ஷம் கலந்து மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கொடுத்து தானும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உள்ளார். பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு மகன், மகளுடன் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார்.

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் நித்யாவின் தந்தை கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகியோர் மயங்கி கிடந்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story