ஜூலை 5-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி


ஜூலை 5-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 26 Jun 2021 12:24 AM GMT (Updated: 26 Jun 2021 12:24 AM GMT)

ஜூலை 5-ந் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்கப் படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் தற்போது குறைந்து வருகிறது.

இருந்தாலும், எதிர்பார்த்த அளவு முடிவு கிடைக்கவில்லை.

ஊரடங்கு நீட்டிப்பு

இந்த நிலையில், கடந்த மாதம் (மே) 24-ந் தேதி முதல், ஒவ்வொரு வாரமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 28-ந் தேதி (நாளை மறுநாள்) காலை ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மேலும் பல்வேறு தளர்வுகளுடன் 7-வது முறையாக அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊரடங்கு தளர்வுகள்

கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

3 வகையாக மாவட்டங்கள் பிரிப்பு

மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே 3 பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வகை 1-ல் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களும், வகை 2-ல் அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களும், வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத்தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக பின்வரும் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது.

பார்சல் சேவைக்கு அனுமதி

டீக்கடைகளிலும், சாலையோர உணவு கடைகளிலும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திரக்கடைகள், பேன்சி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ / வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், வாகன வினியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

எவ்வளவு பணியாளர்களுடன் இயங்கலாம்?

அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், சார் பதிவாளர் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவைகள் 50 சதவீத பணியாளர்களுடனும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் அதன் செயல்பாடுகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இதேபோல், ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடனும், தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடனும், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடனும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமான பணிகளுக்கு அனுமதி

அனைத்து வகையான கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும். அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

இ-சேவை மையங்கள் இயங்கும்

இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். இ-சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும். மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும், உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.

இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும். திறந்த வெளியில், திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும்.

திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

மாலை 7 மணி வரை அனுமதி

வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் / செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத்தளர்வு அளிப்பதுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.

பாத்திரக்கடைகள், பேன்சி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பஸ் போக்குவரத்து தொடக்கம்

சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மாவட்டத்திற்குள் பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கிடையே பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

நகை, ஜவுளி கடைகள் திறப்பு

வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து துணிக்கடைகள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடனும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து நகை கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடனும், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும். திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்களுக்கு அனுமதி இல்லை.

வழிபாட்டு தலங்கள் திறப்பு

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

வகை-2 மற்றும் 3-ல் உள்ள 27 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத்தளர்வுகளுடன், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும். மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் எந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுதுநீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவைகள், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் அதன் செயல்பாடுகள், இதர தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், குளிர்சாதன வசதி இல்லாமல், ஒரே நேரத்தில் 50 சதவீத நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும். அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து கடற்கரைகளிலும், காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கட்டாயம் பின்பற்ற வேண்டியது

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story