ஜவுளிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைப்பு - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு


ஜவுளிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைப்பு - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Jun 2021 9:46 AM GMT (Updated: 28 Jun 2021 9:46 AM GMT)

ஜவுளிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நந்தனார் தெரு ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் தாமோதரன். பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன் சுமை அதிகரித்ததால் விரக்தியில் இருந்த அவர், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி மனைவி தீபா, ஏழு வயது மகன் ரோஷன், நான்கு வயது மகள் மீனாட்சி, தாய் சரஸ்வதி ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் தாமோதரன் தவிர மற்றவர்கள் இறந்து விட்டனர். உயிர் பிழைத்த தாமோதரனுக்கு எதிரான கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2020ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாமோதரனும் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாமோதரனை குற்றவாளி என தீர்மானித்த தீர்ப்பை உறுதிசெய்தனர் நீதிபதிகள். அதேசமயம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன், 25 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Next Story