உள்ளாட்சி தேர்தல்: மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் - செல்லூர் ராஜூ நம்பிக்கை


உள்ளாட்சி தேர்தல்: மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் - செல்லூர் ராஜூ நம்பிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2021 2:24 PM GMT (Updated: 28 Jun 2021 2:24 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்று செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை,

இது குறித்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

''உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல அதிமுக வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்து நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து வருகிறோம். நிச்சயமாக அதிமுக, மதுரைக்கு ஏராளமான திட்டங்களைத் தந்துள்ளது. அந்த திட்டங்கள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன. அதன் காரணமாக மதுரை அதிமுகவுக்கு மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் கிடைப்பார்கள். இதனால் உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும்.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக அரசு அமைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மகளிருக்கு ரூ.1,000 நிதி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.

அதிகரித்துள்ள விலைவாசியை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த மக்கள் குழுமி வருகிறார்கள். அதனைத் தடுக்க வேண்டும். டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Next Story