கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியை தவிர வேறு வழி இல்லை: சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி


கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியை தவிர வேறு வழி இல்லை: சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
x
தினத்தந்தி 28 Jun 2021 9:43 PM GMT (Updated: 28 Jun 2021 9:43 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியை தவிர வேறு மாற்று வழியில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கூறினார்.

தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வக்கீல்கள், வக்கீல் குமாஸ்தாக்கள், கோர்ட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி 
சஞ்சீவ் பானர்ஜி நேற்று தொடங்கிவைத்தார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, ராஜ்யசபா எம்.பி.யும், மூத்த வக்கீலுமான பி.வில்சன், தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பார் கவுன்சில் உறுப்பினர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகனகிருஷ்ணன், பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாற்று வழியில்லை
முகாமில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். முகாமை தொடங்கிவைத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ‘கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி தவிர வேறு மாற்று வழியில்லை. கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க முககவசம், கிருமிநாசினி, தனி மனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்று பேசினார்.

சேப்பாக்கம் தொகுதி முதலிடம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திகழ்கிறது. அங்கு 90 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story