ஆபாச சாட்: சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கு முடக்கம்


ஆபாச சாட்: சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கு முடக்கம்
x
தினத்தந்தி 30 Jun 2021 3:34 AM GMT (Updated: 30 Jun 2021 3:34 AM GMT)

போலீஸ் விசாரணை முடிந்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16-ந் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் (ஜூலை 1-ந் தேதி வரை) காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அழைத்து வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவரை நேரடியாக கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச் சென்று நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

அதன்படி உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு, நேற்று கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். பள்ளியில் சிவசங்கர் பாபாவின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை திறந்து போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் பள்ளியில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய "ஆபாச சாட்" சிக்கி உள்ளது என்றும், அதில் மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இ-மெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். 

இந்த விசாரணையின்போது சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் விசாரணை முடிந்து சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story