“குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்” - பெற்றோர்களுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 July 2021 9:00 AM GMT (Updated: 1 July 2021 9:00 AM GMT)

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை, 

ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையை கொண்டுவரக் கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், ஆன்லைன் விளையாட்டுக்களால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாப்பாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களுக்கும் ஆளவதாக வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலரும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர், 

அதேசமயம் ஆன்லைன் மற்றும் ஆப்லைப் விளையாட்டுகளுக்கும் அவர்கள் அடிமையாகி விடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற காரணங்களுக்காக, அதிக அளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் தடுக்க அரசுகள் தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

செல்போன், ஆன்லைன் விளையாட்டுகளால் பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருவதாக கவலை தெரிவித்ததுடன், தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தினர். குழந்தைகளை மாலையில் வெளியில் உடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு தங்களை தாங்களே கட்டுப்படுத்தி கொள்ளும் சுய ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இத்தகைய விவகாரங்களில் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மனுதாரரின் புகார் தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலித்து 8 வாரத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Next Story