சென்னை ஐ.ஐ.டி.யில் எரிந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உடல்
போலீசார் விசாரணையில் இறந்த நபர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் (30) என்பது தெரியவந்தது.
சென்னை
சென்னை கோட்டூர்புரத்தில் ஐ.ஐ.டி கல்லூரி கொரோனா காரணமாக மூடப்பட்டு உள்ளது. ஐ.ஐ.டி விடுதியில் மாணவர்கள் தங்கி ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக விளையாட்டு பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் வந்தார்.
அப்போது எரிந்த நிலையில் ஆண் ஒருவரிடன் உடல் கிடந்ததை கண்டு கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உஅடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்த நபர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் (30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர், மேலும் அவர் கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியெட்டாக சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர் வேளச்சேரியில் உள்ள லதா தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று காலை உன்னி கிருஷ்ணன் நாயர் கல்லூரிக்கு வந்ததை சிசிடிவி மூலம் போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவரின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டில் போலீசார் சோதனை செய்த போது11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் கிடைத்தது அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவருடன் தங்கி வரும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உன்னி கிருஷ்ணனின் தந்தை ரகு இஸ்ரோ விஞ்ஞானி என்பதும் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story