தமிழ்நாட்டின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்


தமிழ்நாட்டின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 July 2021 10:26 PM GMT (Updated: 2 July 2021 10:26 PM GMT)

தமிழ்நாட்டின் சுகாதார தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நலத்திட்டங்கள்

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், புதிய மருத்துவ கல்லூரிகளின் தற்போதைய நிலை, பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும், உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சர்வதேச தரம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்திடவும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனை செயல்பாடுகள், ‘எய்ட்ஸ்’ கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்துவது, அரசு மருத்துவ நிலையங்களில் உள்ள பணியாளர் காலிப்பணியிடங்களை 
உடனுக்குடன் நிரப்புதல், உணவு பாதுகாப்பு, மருத்துவமனை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு இணையவசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், தமிழ்நாட்டில் சுகாதார தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மாணவர்களை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story