சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்; 2 பேருக்கு வலைவீச்சு


சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்; 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 July 2021 11:06 PM GMT (Updated: 3 July 2021 11:06 PM GMT)

மார்த்தாண்டம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் கார், மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் 2 பேரை போலீ சார் தேடிவருகின்றனர்.

மார்த்தாண்டம்,

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் செலின் குமார் (வயது 50). இவர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார்.

இந்தநிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் கவச உடை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் செலின் குமார் வீட்டு அருகே வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென அவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில் வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், கார் தீப்பற்றி எரிந்தன. பெட்ரோல் குண்டு வெடித்த பயங்கர சத்தம் கேட்டு செலின்குமாரும், அக்கம் பக்கத்தினரும் வெளியே ஓடி வந்தனர்.

வாகனங்கள் எரிந்தன

வாகனங்கள் எரிவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். தீயணைப்பு படையினர் வந்து வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். மர்மஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது செலின்குமார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, இந்த செயலில் மர்மநபர்கள் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாமா? என பல கோணங் களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த ஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story