மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டிய விவகாரம்: நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் அமைச்சர் துரைமுருகன் உறுதி


மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டிய விவகாரம்: நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் அமைச்சர் துரைமுருகன் உறுதி
x
தினத்தந்தி 4 July 2021 2:04 AM GMT (Updated: 4 July 2021 2:04 AM GMT)

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டிய விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியிருப்பது தொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும். 2017-ல் மத்திய நீர்வள குழுமத்தின் என்ஜினீயர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நில நீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள ஒரு அணையை கட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2019-ல் இந்த அணை அனேகமாக கட்டி முடித்து விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. கர்நாடகாவின் இந்த செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் 18.5.2018-ல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன்பேரில் சுப்ரீம் கோர்ட்டு 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

நடுவர் மன்றத்தின் மூலம் தீர்வு

29.6.2021 அன்று தமிழ்நாடு அரசு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும், நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தி உள்ளது. இந்த அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுகாவில் மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மார்கண்டேய நதியை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story