தமிழகத்திலேயே முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி


தமிழகத்திலேயே முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 4 July 2021 3:56 AM GMT (Updated: 4 July 2021 3:56 AM GMT)

தமிழகத்திலேயே முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கடலூர்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 57 நாட்களில் 29 மாவட்டங்களுக்கு சென்று கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். 30-வது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதனை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1½ கோடி பேருக்கு தடுப்பூசி

தடுப்பூசி செலுத்தும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) இரவு நிலவரப்படி 1½ கோடிக்கு மேல் தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு இதுவரை வரப்பெற்ற தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 550. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 52 ஆயிரத்து 785. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 41 ஆயிரத்து 220 ஆகும். மத்திய அரசிடம் இருந்து ஜூலை மாதத்திற்குரிய தொகுப்பான 71 லட்சம் தடுப்பூசிகள் படிப்படியாக வரப்பெற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது.

ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மத்திய அரசிடம் இருந்து கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகு தமிழகத்திலேயே முதல் முறையாக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

தொற்று குறைந்துள்ளது

18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. நேற்று இரவு (நேற்று முன்தினம்) நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,230 ஆகும். மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இத்தொற்றிலிருந்து மீண்டு, நலமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை 4,952 ஆகும்.

தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால் 1½ கோடி பேருக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டுள்ளனர். முதல்-அமைச்சர் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகப் பெரிய அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி முகாம், கட்டிடத்தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம், விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் என்று தாமே முன்னின்று தொடங்கி வைத்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி முடித்துள்ளார். அதேபோல் 97 ஆயிரத்திற்கும் மேல் உள்ள தமிழக வக்கீல்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story