காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்


காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 July 2021 6:08 AM GMT (Updated: 4 July 2021 6:08 AM GMT)

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

காஞ்சீபுரம்,

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கணவருடன் கார் மூலம் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த தமிழிசை சவுந்தரராஜனை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கோவில் நுழைவுவாயிலில் கோவிலின் ஸ்ரீகாரியம் சுந்தரேசஅய்யர், சங்கர மடத்தின் மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் அவரை மேளதாளங்களுடன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

பிறகு அம்மன் கருவறைக்கு சென்ற அவர் அம்மனை மனமுருகி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து குங்கும பிரசாதம் வழங்கினர்.

கோவில் வளாகத்தில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் உலக நன்மைக்காக லலிதா சகஸ்ரநாம சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டார்.

தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: -

நிரந்தர பாதுகாப்புக்கு அனைவருமே தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதே எனது அன்பு வேண்டுகோள்.

பொதுமுடக்கத்தின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்கள் திறந்தவுடன் முதல் முறையாக காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். எனக்கு மிகவும் விருப்பமான தெய்வம் காஞ்சி காமாட்சி அம்மன். 3-வது அலை வந்து விடவே கூடாது, எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காமாட்சி அம்மனை வேண்டி கொண்டேன். புதுச்சேரி மக்கள் 45 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுவிட்டனர். புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணிய நாம் பழகி கொண்டது போல, தலைக்கவசம் அணியவும் நாம் பழகி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்கராச்சாரியாரிடம் ஆசி

அதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று மகாபெரியவரின் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார். பிறகு சங்கராச்சாரியார் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். காமாட்சி அம்மன் திருவுருவ படத்தையும், கோவில் பிரசாதத்தையும் விஜயேந்திரர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கினார்.

இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, காஞ்சி குமாரசாமி, ராஜவேல், நகர தலைவர் ஜீவானந்தம் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர்

தமிழிசை சவுந்தரராஜன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு தனது கணவர் டாக்டர் சவுந்தரராஜனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

அவரை கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி தலைமையில் கோவில் ஊழியர்கள் மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், சாந்தகுமார் உள்ளிட்டார் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

கோவில் வாசலில் தமிழிசை தனது கையில் சானிடைசர் தெளித்து, உடல் வெப்ப பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார்.

Next Story