அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது: சசிகலா


அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது: சசிகலா
x
தினத்தந்தி 4 July 2021 8:49 PM GMT (Updated: 4 July 2021 8:49 PM GMT)

அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது. இது தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி என்று சசிகலா பேசியுள்ளார்.

சசிகலா பேச்சு
சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். அந்தவகையில் திருப்பூரைச் சேர்ந்த கிரிதரன், நடிகர் குண்டு கல்யாணம், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையன், மதுரையைச் சேர்ந்த ராஜசேகரன், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜமுனாராணி ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் உரையாடினார். 

அப்போது அவர் பேசியதாவது:-
கட்சியின் மீது அதீத பற்றுக் கொண்டிருக்கும் தொண்டர்கள் இருக்கும்வரை, அ.தி.மு.க.வுக்கு யாரும் தனியுரிமை கோரமுடியாது. இது தொண்டர்களின் கட்சி. தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி. நிச்சயம் தொண்டர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இந்தக் கட்சியை நல்லபடியாக வழிநடத்தி, அம்மா நினைத்தது போல நல்லபடியாக பெயர் வாங்கிக் கொடுப்போம். நிச்சயம் 
அதைச் செய்வேன். கட்சியை மீட்டெடுத்து நல்லாட்சி தருவேன்.

பழைய ஆட்களுக்கு மரியாதை இல்லை
எனவே தொண்டர்கள் கவலைப்படவே வேண்டாம். நிச்சயம் நான் வருவேன். கட்சியை நல்லபடியாக வழிநடத்துவேன். ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து பகுதிகளிலும் உள்ள தொண்டர்களைச் சந்திப்பேன். தொண்டர்கள் மனசுபடி நான் நிச்சயம் செய்வேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இது தொண்டர்களின் கட்சி. இப்போது ஒரு சிலர் தவறான 
போக்கை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறு. எல்லா தொண்டர்களுக்கும் கட்சியில் உரிமை உண்டு. யாரும் மனதை விட்டவிட வேண்டாம். கட்சியில் பழைய ஆட்களுக்கு மரியாதை இல்லை என்று எல்லாருமே சொல்கிறார்கள். எனவே யாரும் வருத்தப்பட வேண்டாம். எல்லாவற்றையும் சரி பண்ணிடலாம். நான் இருக்கேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story