'உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு: ‘தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல’


உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு: ‘தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல’
x
தினத்தந்தி 8 July 2021 2:12 AM GMT (Updated: 8 July 2021 2:12 AM GMT)

‘தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல என்றும், உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் பதில் அளித்தார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் தோல்விக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம். இதனால் முழுமையாக சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டோம் என்று அ.தி.மு.க.வின் விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சி.வி.சண்முகம் கூறிய பத்திரிகை செய்தியை போட்டு அதற்கு மேல், ‘உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு...’ என்ற கருத்தை பதிவிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து கே.டி.ராகவன் இதுதொடர்பாக சில கருத்துகளை நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கருத்தா?

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ஜ.க. கூட்டணிதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று சொல்லி இருக்கிறார். இது அ.தி.மு.க. கருத்தா என்பதை பார்க்க வேண்டும். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இதுவரை அப்படி எதுவும் பேசவில்லை. பா.ஜ.க.வில்கூட இதுபோன்ற கருத்துகள் இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்தான் இந்த கூட்டணியின் தோல்விக்கு காரணம் என்று எங்கள் கட்சியின் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் கருதுகிறார்கள்.

அதனால் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகள் மக்களிடம் வாக்குகளாக மாறாமல் போனதற்கு, அ.தி.மு.க. எடுத்த சில நடவடிக்கைகள், அவர்களின் 5 ஆண்டுகால ஆட்சியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்கூட காரணம் என்று எங்களின் நிர்வாகிகளும் கருதுகிறார்கள்.

ஏற்புடையது அல்ல

சிறுபான்மை வாக்குகள் கிடைக்காததற்கு பா.ஜ.க. காரணம் என்று சொல்லியிருக்கிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்றோம். உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 18 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். மீரட் போன்ற பகுதிகளிலும் அதிகம் வாழ்கிறார்கள். அங்கெல்லாம் பா.ஜ.க. வெற்றிபெற்று இருக்கிறது.

வடகிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் மற்றும் கோவா போன்ற சில இடங்களில் பா.ஜ.க. ஆட்சிதான் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் இந்தியா முழுவதும் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாக்களித்த காரணத்தினால்தான் மத்தியிலும், பல மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. எனவே தோல்விக்கு பா.ஜ.க.வை குற்றம்சாட்டுவது என்பது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story