தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் மு.க.ஸ்டாலின் உத்தரவு


தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2021 3:23 AM GMT (Updated: 9 July 2021 3:23 AM GMT)

தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 8-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கல்வி உதவித் தொகை

பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ‘‘போஸ்ட் மெட்ரிக்” மற்றும் ‘‘பிரி மெட்ரிக்” கல்வி உதவித்தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்வி உதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வேண்டும்.

பஞ்சமி நிலங்கள்

ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் கீழ்ச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் கூடுதலாக வசதிகள் தேவைப்படும் குடியிருப்புகளைக் கண்டறிந்து அக்குடியிருப்புகளுக்கு அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்கள், ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாட்கோ திட்டங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்த முதல்-அமைச்சர், துரித மின் இணைப்புத் திட்டத்திற்கான வைப்புத் தொகையை உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயல்பாடுகள், துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவ்வித குறைபாடும் இன்றி முழுமையாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கோரும் பணியாளர்களுக்கு முறையாக வேலை வழங்குவது, வேலைக்கான ஊதியத்தினை குறித்த நேரத்தில் வழங்குவது, திட்ட செயலாக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஊரகப் பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஊரகப் பகுதியில் உள்ள நீர்நிலைகளை புனரமைப்பு செய்தல், ஏற்கனவே கட்டப்பட்ட சமத்துவபுரங்களை பழுதுபார்த்து சீரமைத்தல், புதிய சமத்துவபுரங்களை உருவாக்குதல், ஊரக உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் குறித்தும், ஊராட்சிகளில் மின் ஆளுமையின் மூலம் சேவைகளை மேம்படுத்துதல், பணிகள் மற்றும் நிதி பயன்பாடு ஆகியவற்றை மின் ஆளுமை மூலம் கண்காணித்தல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தற்சார்பு பெற்ற கிராமங்களை உருவாக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி தலைமை இயக்குனர் (பயிற்சி) ஜெயஸ்ரீ ரகுநந்தன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பிரவீன் பி.நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story