தமிழகத்தில் 3,590 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் 3,590 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 9 July 2021 3:29 AM GMT (Updated: 9 July 2021 3:29 AM GMT)

தமிழகத்தில் 3,590 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்து, மருத்துவ மாணவர்களுக்கான ஓட்டப்பந்தையத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 55,052 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த ஆஸ்பத்திரியில் 2,200 படுக்கைகள் உள்ளன. தற்போது 115 பேர் மட்டுமே அதில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கருப்பு பூஞ்சை நோயால் 3,590 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோயால் 778 பேர் பாதிக்கப்பட்டு 216 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனுமதி கிடைத்ததும் டெல்லி செல்வோம்

புதிதாக பதவி ஏற்றுள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க அனுமதி கிடைத்ததும் டெல்லி சென்று தடுப்பூசி மற்றும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து வலியுறுத்த உள்ளோம். ஆனால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்டமிட்டப்படி டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தடுப்பூசி குறித்து வலியுறுத்த உள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக நீர்நிலைகளில் கொசுக்களை அழிக்க ‘டிரோன்’களை பயன்படுத்தி, நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியை தடுத்து வருகிறோம். டெங்கு காய்ச்சலால் ஜனவரி முதல் தற்போது வரை 2,090 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எந்த வைரசும் இங்கே வரக்கூடாது என்று உறுதியாக இருக்கிறோம். எந்த வைரஸ் வந்தாலும் ஐ.சி.எம்.ஆர் ஆலோசனை வழங்குகிறார்கள். அனைத்து மாநில எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை

தி.மு.க அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தினசரி 230 டன் ஆக்சிஜன்தான் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இப்போது தினமும் 900 டன் உள்ளது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், சிலிண்டர் போதுமான அளவு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடக்கிறது. அதை வாங்கி சேமித்து வைக்கிறோம். கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் 3-வது அலையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

அடுத்த தவணை தடுப்பூசி

மேலும் தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 50 தடுப்பூசி வந்துள்ளது. அதில் 1 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 402 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 730 கையிருப்பில் உள்ளது இன்று மாலை வரை இந்த தடுப்பூசிகள் போதுமானது. அடுத்து 11-ந்தேதிதான் தடுப்பூசிகள் வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story