அதிகார வரம்பை மீறிய செயல் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மாநில அரசு குழு அமைக்க முடியாது மத்திய அரசு ஐகோர்ட்டில் பதில்


அதிகார வரம்பை மீறிய செயல் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மாநில அரசு குழு அமைக்க முடியாது மத்திய அரசு ஐகோர்ட்டில் பதில்
x
தினத்தந்தி 9 July 2021 4:18 AM GMT (Updated: 9 July 2021 4:18 AM GMT)

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மாநில அரசு குழு அமைக்க முடியாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில், ‘நீட்' தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பியது. இதன்பின்பு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசு பதில் மனு

இதன்பின்பு, இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். இந்தநிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பு செயலாளர் சந்தன்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

எம்.பி.பி.எஸ்., எம்.டி. பி.டி.எஸ்., எம்.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மருத்துவக்கல்வி மேம்படும்

இந்தநிலையில் இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம் என மாற்றப்பட்டது. அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திலும் நீட் தேர்வு குறித்து விளக்கப்பட்டு நீட் தேர்வை நடத்தும் சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டது.

நீட் தேர்வை நடத்த சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது. ‘நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்வி மேம்படும். நீட் தேர்வு மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும். நீட் தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவசியம் இல்லை

நீட் தேர்வு தொடர்பான சட்டமும், விதிகளும், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கூற முடியாது. பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

நீட் தேர்வு தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது முறையாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு தனியாக குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு முரணானது.

அதிகார வரம்பை மீறிய செயல்

மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்துள்ளது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமிக்க முடியாது.

நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் 13-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story