தமிழகத்தில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


தமிழகத்தில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2021 2:20 AM GMT (Updated: 13 July 2021 2:20 AM GMT)

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை, 

பாதுகாப்பான பயணம், சரக்குகளை மாநிலம் முழுவதும் எடுத்துச்செல்லும் வகையில், தமிழகத்தில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 12-7-2021 அன்று (நேற்று) சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்தில் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லும் வகையிலும் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு அலகுகளில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருங்காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் முறையாக திட்டமிட்டு, விரைவாக முடிக்கப்பட வேண்டும் எனவும், சாலை பணிகளின்போது இதர அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், மத்திய அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிகளான உயர்மட்ட சாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எஸ்.சிவசண்முக ராஜா, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத்தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-2 திட்ட இயக்குனர் பி.கணேசன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பி.ஆர்.குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story