சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த பெற்றோருக்கு கத்திக்குத்து


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த பெற்றோருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 16 July 2021 7:27 AM GMT (Updated: 16 July 2021 7:27 AM GMT)

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த பெற்றோருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (60). பா.ஜ.க பிரமுகரான இவர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்ததோடு மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

இது குறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மகாலிங்கத்தின் மனைவி ராஜலட்சுமி, புகார் அளித்த சிறுமியின் தந்தைக்கும் தங்களுக்கும் போக்கியத்திற்கு இடம் வாங்கியது தொடர்பாக பணப்பிரச்சினை உள்ளதாகவும், பணத்திற்காக வேண்டுமென்றே பொய்புகார் அளித்துள்ளதாகவும் உரிய விசாரணை செய்யாமல் போலீசார் தனது கணவரை கைது செய்துள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் புகார் அளித்த சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று விட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பா.ஜ.க. பிரமுகர் மகாலிங்கம் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து வழிமறித்து கத்தி மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த சிறுமியின் பெற்றோர் தரப்பை சேர்ந்த சத்தியராஜ் என்பவரையும் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்தவர்களை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாலியல் புகார் அளித்ததற்காக கொலைமிரட்டல் விடுத்து வந்த நிலையில் பா.ஜ.க. பிரமுகர் மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர், சுதாகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் தங்களை தாக்கி கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜவகர் சுதாகர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து குத்தாலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story