மேகதாது அணை விவகாரம்: விரைவில் பிரதமரை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மேகதாது அணை விவகாரம்: விரைவில் பிரதமரை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 July 2021 7:46 AM GMT (Updated: 16 July 2021 12:09 PM GMT)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


சென்னை

கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை மாநில அரசு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதல் வேண்டி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள இந்த மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எக்காரணம் கொண்டும் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதற்கு மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதி, மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கோரினார். இரு மாநிலங்களும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

 இந்த பிரச்சினையில் இரு மாநிலங்களின் நலன்களுக்கும் காக்கும் வகையில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தபோது கூறினார். அதே நேரத்தில் மேகதாது திட்ட விஷயத்தில் கர்நாடகத்திற்கு உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் எடியூரப்பாவிடம் உறுதியளித்தார்.

 இந்த நிலையில் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றது. அங்கு ஜல்சக்தித்துறை மத்திய மந்திரியை நேரில் சந்தித்து அந்த குழு முறையிட்டு உள்ளது. மேகதாது விஷயத்தில் இரு மாநிலங்களும் தங்களின் முடிவில் பிடிவாதமாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இன்று  திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.அங்கு  பிரதமரை நேரில் சந்திக்கும்போது மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு எடியூரப்பா கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க  விரைவில்  டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வரும் திங்கட்கிழமை (ஜூலை 19ம் தேதி) நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால் அதற்கு முன்னர் பிரதமரை முதல்-அமைச்சர்  சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் என்றைக்கு பிரதமரை சந்திப்பார் என்ற தேதி இன்னும் உறுதியாகவில்லை என்பதால் இன்று மாலை சென்னையில் நடைபெறும் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அது சொல்லப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் கூட்டத்தின் முடிவில், முதல்-அமைச்சர் யாருடன் சென்று பிரதமரை சந்திப்பார் என்றைக்கு சந்திப்பார் என அறிவிக்கப்படலாம் 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை கர்நாடக முதல்- மந்திரி  சந்திக்க உள்ள நிலையில் தமிழக முதல் அமைச்சரும் பிரதமரை சந்திக்க திட்டம் மிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story