கள்ளக்காதலியை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சப் -இன்ஸ்பெக்டர் கைது


கள்ளக்காதலியை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சப் -இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 18 July 2021 5:12 AM GMT (Updated: 18 July 2021 5:12 AM GMT)

கள்ளக்காதலியை தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

கோவை, 

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அபிநயா (வயது 40). இவர், கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை உழவர் சந்தையில் வேலை செய்கிறார்.

கோவை ரேஸ்கோர்ஸ் சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் (55). இவருடைய தம்பி வக்கீலாக இருந்து அபிநயாவின் விவாகரத்து தொடர்பான வழக்கை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கும், அபிநயாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளதொடர்பாக மாறியது. இதைத்தொடர்ந்து அபிநயாவுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை சப் - இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் அபிநயாவுக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் அபிநயாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மேலும் அவர், உழவர் சந்தையில் அபிநயாவின் தந்தை நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்துள்ளார்.

இது குறித்து அபிநயா கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் பெண் வன்கொடுமை மற்றும் தாக்குதல், மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தல் உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story