கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்


கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்
x
தினத்தந்தி 19 July 2021 7:33 AM GMT (Updated: 19 July 2021 7:33 AM GMT)

உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து தேர்வுத்துறை வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது. 

அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 20 சதவீதம், 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மேலும் 22-ம் தேதி அன்று காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in,  http://www.dge.tn.nic.in  என்ற இணையதளங்களில், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கல்லூரிகளில் சேர வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, “பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம்” என்று அவர் கூறினார்.

இதனிடையே ஜூலை 31-ஆம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளதால் அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story