ஜனாதிபதியிடம் பேசியது என்ன? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


ஜனாதிபதியிடம் பேசியது என்ன? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 19 July 2021 8:16 AM GMT (Updated: 19 July 2021 8:19 AM GMT)

டெல்லியில் ஜனாதிபதி ராம் கோவிந்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு, முதல் முறையாக கடந்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து 2-வது முறையாக நேற்று மாலை 5 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். 

இந்நிலையில் இன்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். 

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமைதாங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தேன். சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்கவும், மதுரையில் அமைக்கப்படவிருக்கும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கும், கிண்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளேன். எனது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அதற்கான தேதியை இரண்டொரு நாளில் வழக்குவதாக தெரிவித்தார். 

மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. 

கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை. பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “மாண்புமிகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் சந்தித்தேன். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன்” என்று பதிவிட்டிருந்தார்.

Next Story