காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்தார்: மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்தார்: மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
x
தினத்தந்தி 19 July 2021 9:11 PM GMT (Updated: 19 July 2021 9:11 PM GMT)

காதல் விவகாரத்தில் மகள் விஷம் குடித்ததால், மனமுடைந்த தாயும், மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு மகள் குழாயை பிடித்தபடியே கிணற்றில் விடிய, விடிய தவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மின்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 50). இவர் பெங்களூருவில் தங்கி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்சவேணி (45). இவர்களுக்கு பிரியா (19), திரிஷா (17) ஆகிய 2 மகள்களும், விஷ்ணு (14) என்ற மகனும் இருந்தனர். இதில் பிரியா பர்கூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திரிஷா பிளஸ்-2 வும், சிறுவன் விஷ்ணு 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் திருப்பதி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் குறித்து அறிந்த மகாலிங்கம், அம்சவேணி ஆகியோர் மகளுக்கு திருமணம் செய்ய உறவினர் ஒருவருக்கு பேசி நிச்சயம் செய்தனர். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடக்க இருந்தது.

காதலர்கள் விஷம் குடித்தனர்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறுவதை அறிந்த திருப்பதி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டார். அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் விஷம் குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரியா, தானும் விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகள் காதலனுக்காக விஷம் குடித்ததால் மனமுடைந்த அம்சவேணி தனது கணவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்தார்.

தாய், மகன் தற்கொலை

இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நள்ளிரவில் தனது 2-வது மகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணு ஆகியோருடன் தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்தார். இதில் அம்சவேணியும், சிறுவன் விஷ்ணுவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திரிஷா கிணற்றில் இருந்த குழாயை பிடித்து உயிர் தப்பினார். குழாயை பிடித்தவாறு விடிய, விடிய கிணற்றில் தவித்த திரிஷா விடியற்காலையில் மேலே ஏறிவந்து கிராமத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட தாய், மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story