பிளஸ்-2 மதிப்பெண் வெளியீடு எதிரொலி: பொறியியல், கலைக்கல்லூரிகளில் சேர 26-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


பிளஸ்-2 மதிப்பெண் வெளியீடு எதிரொலி: பொறியியல், கலைக்கல்லூரிகளில் சேர 26-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 July 2021 10:21 PM GMT (Updated: 19 July 2021 10:21 PM GMT)

பொறியியல், கலைக்கல்லூரிகளில் சேர 26-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை,

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிற ‘கெஸ்ட் லெக்சரர்ஸ்’ என்ற கவுரவ விரிவுரையாளர்கள், தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டு இருப்பதற்கு நன்றி சொல்வதற்காக என்னை சந்தித்தனர்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்ததை நிறுத்தி, அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரப் பணிக்கு தேர்வு

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்வதற்கான அறிவிப்பு பின்னர் முறையாக அறிவிக்கப்படும். அவர்கள் டி.ஆர்.பி. அல்லது டி.என்.பி.எஸ்.சி. மூலமாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவர்களின் பணி மூப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு, யு.ஜி.சி. தகுதி பெற்றுள்ளவர்களுக்கு அதற்குரிய மதிப்பெண்கள் வழங்கப்படும். எந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் என்றாலும் அவர்கள் அப்படியே பணியைத் தொடரலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.

குழு கலைப்பு

கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்வதாகக் கூறி கடந்த ஆட்சியில் குழு அமைக்கப்பட்டது. அதில், டி.ஆர்.பி. அல்லது டி.என்.பி.எஸ்.சி.யின் செயல்பாடு இல்லாமல் இருந்தது. எனவே அதில் பல்வேறு ஊழல்களுக்கு வழிவகுக்கப்பட்டு இருந்தது. எனவே அந்தக்குழு கலைக்கப்பட்டுவிட்டது.

இனிமேல் தமிழகத்தில் இருக்கிற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு, முறையாக நடைபெறும். அவர்கள் முறையாக அவர்களின் பணியை மேற்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக மதிப்பெண்ணை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றாலும், முறையாக 22-ந் தேதி அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மதிப்பெண்கள் அவர்களைச் சென்றடைந்தவுடன், பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்காக 26-ந் தேதியில் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளும் 31-ந் தேதிக்குள் வந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே 26-ந் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 24-ந் தேதிவரை அவர்கள் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கு அனைத்து கல்லூரிகளும் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story