மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி - சசிகலா ஒரே நேரத்தில் வருகை தந்ததால் பரபரப்பு


மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி - சசிகலா ஒரே நேரத்தில் வருகை தந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2021 7:29 AM GMT (Updated: 20 July 2021 7:51 AM GMT)

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி - சசிகலா ஒரே நேரத்தில் வருகை தந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் டாக்டர்களின் நேரடி கட்டுப்பாட்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுசூதனன் உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி வட்டாரத்தில் விசாரித்தபோது, தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மதுசூதனன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று அவர் உடல் நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வரப்போவதாக தகவல் வெளியானது அதே நேரத்தில் சசிகலாவும் வரப்போவதாக தகவல் வெளியானது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி டாக்டர்களிடம் மதுசூதனன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதுபோல்  அ.தி.மு.க கொடியுடன் கூடிய காரில் சசிகலா  மருத்துவமனை வந்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து விட்டு வெளியே செல்லும் வரை காரில் காத்திருந்த சசிகலா பின்னர் மருத்துவமனை சென்று  அங்கு டாக்டர்களிடம் மதுசூதனன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அ.தி.மு.க. மீது அதிக பற்றுக்கொண்ட மதுசூதனன் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து நலம் விசாரித்தேன்; அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என கூறினார்.

Next Story