சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு 'போக்சோ' சட்டம் குறித்து பயிற்சி ஐகோர்ட்டு உத்தரவு


சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 July 2021 9:13 PM GMT (Updated: 21 July 2021 9:13 PM GMT)

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் மீது புதுச்சத்திரம் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் சிறப்பு கோர்ட்டு, வெங்கடாச்சலத்துக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு தண்டனையும் விதித்து, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

தண்டனை உறுதி

இந்த தீர்ப்பை எதிர்த்து வெங்கடாச்சலம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

வெங்கடாச்சலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். எனவே, மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு வழங்கியுள்ள தண்டனையை உறுதி செய்கிறேன். ஆனால், போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்கிறேன். இரு பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தண்டனையை அனுபவிக்கும் வகையில் வெங்கடாச்சலத்தை சிறையில் அடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை நாமக்கல் மகளிர் கோர்ட்டு மேற்கொள்ள வேண்டும்.

நீதிபதிகளுக்கு பயிற்சி

போக்சோ சிறப்பு கோர்ட்டுகளில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சிகளை வழங்க வேண்டும். இதற்கான அனுமதியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம், ஐகோர்ட்டு தலைமை பதிவாளரும், தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகடாமி இயக்குனரும் பெற வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story