தமிழகத்தில் 1.96 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் 1.96 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 21 July 2021 9:23 PM GMT (Updated: 21 July 2021 9:23 PM GMT)

தமிழகத்தில் 1.96 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்துக்கு மத்தியபிரதேச மருத்துவ கல்வி மந்திரி விஸ்வாஸ் கைலாஷ் சாரங் நேற்று வந்திருந்தார். அவர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து, தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி வருமாறு:-

2 கோடியை நெருங்குகிறது

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது 2 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை அரசு மூலம் 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை 12 லட்சத்து 87 ஆயிரத்து 223 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதுவரை 1 கோடியே 96 லட்சத்து 43 ஆயிரத்து 859 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. ஜூலை மாதத்துக்கான ஒதுக்கீடாக 17 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 4 லட்சம் தடுப்பூசிகளை மட்டும்தான் தனியார் ஆஸ்பத்திரிகள் பயன்படுத்தியுள்ளன. மீதமுள்ள 13 லட்சம் தடுப்பூசிகளை அரசு பெற்று மக்களுக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியாரிடம் இலவச தடுப்பூசி

தனியார் ஆஸ்பத்திரிகளில் கோவேக்சின் தடுப்பூசி ஆயிரத்து 410 ரூபாய்க்கும், கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.780-க்கும் செலுத்தப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் வசூலிப்பதால் அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

எனவே, இந்தியாவிலேயே முதல் முறையாக சி.எஸ்.ஆர். நிதி மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கூட்டத்தில் 117 தனியார் ஆஸ்பத்திரிகள் பங்கேற்றன.

சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பு

அதுபோன்ற கூட்டம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுடன் இன்னும் 2 நாட்களில் சென்னையில் நடைபெறும். அதில் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கும். அதன்படி, தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னையிலும் தொடங்க இருக்கிறோம்.

தொடர்ந்து திருச்சி, நெல்லை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

12 கோடி தடுப்பூசிகள் வேண்டும்

தமிழகத்துக்கு மொத்தம் 12 கோடி தடுப்பூசிகள் வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒன்றிணைவதால் கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த முடியும்.

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது. 1 கோடி கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பின்னர் முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு, மருத்துவத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய மத்தியபிரதேச மந்திரி விஸ்வாஸ் கைலாஷ் சாரங், ‘மத்தியபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 3-வது அலையை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் முன்எச்சரிகையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது’ என்றார்.

Next Story